ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்! - சஜித் தரப்பு கோரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறிய விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைப்பையும் , இலவச உரத்தையும், தடுப்பூசியையுமே எதிர்பார்த்தனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். தற்போது நாட்டின் புலனாய்வு பிரிவு பலமடைந்துள்ளதாகவும் கூறினார். அவ்வாறெனில் ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஏன் அந்த புலனாய்வு பிரிவினரால் யாரையும் கைது செய்ய முடியவில்லை?
குறைந்தபட்சம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கூட நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றார்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு முழு வருடத்திலும் 45 கிலோ கிராம் ஹெரோயின் மாத்திரமே கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அனர்த்தங்கள் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார்.
எமது ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அனர்த்தம் ஏற்பட்டது. ஆனால் நாம் ஒன்றரை பில்லியன் அனர்த்த காப்புறுதி செய்திருந்தமையால் அதனை மக்களுக்கு நிவாரணமாக வழங்கினோம். பொதுஜன பெரமுன அரசாங்கமே அதனை இல்லாமல் செய்தது.
தற்போது பொறுத்தமான பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கு கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மீண்டும் மீண்டும் கூறிய பொய்களையே கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.