அழிவான சந்தர்ப்பத்தில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது அதிஷ்டம் - சாகர காரியவசம்
நாட்டில் ஏற்பட்டுள்ள இப்படியான அழிவான சந்தர்ப்பத்தில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது அதிஷ்டம் எனவும் சஜித் பிரேமதாச ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டு மக்கள் வீதியில் இறந்து கிடந்திருப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மைய கால வரலாற்றில் மனித இனம் எதிர்நோக்கிய மிகவும் பயங்கரமான அனர்த்தத்தை முழு உலகமும் எதிர்நோக்கி வருகிறது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்ன என்பதை நாம் காண்கின்றோம்.
ஐரோப்பாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்ன?. அதேபோல் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் என கூறும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்ன?. சரியான நேரத்தில் எமது அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியது அதிஷ்டம் என்பதுடன் இதற்காக 69 லட்சம் மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியில் இல்லாமல் இருந்தால், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை எண்ணிக் கூட பார்க்க முடியாது. குறித்த தினத்தில் குறித்த இடங்களில் குண்டு வெடிக்கும் என இந்திய புலனாய்வு சேவை தகவல் வழங்கியும் அதனை தடுக்க முடியாமல் போன அரசாங்கமே ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது ஆட்சியில் இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சஜித் பிரேமதாச போன்றவர்கள் தற்போது ஆட்சியில் இருந்தால், மக்கள் வீதிகளில் இறந்து கிடந்திருப்பார்கள். இப்படியான நிலைமையிலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து, மக்களை பட்டினியின்றி வைத்திருக்க முடிந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் நிலைமையை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து வருவதால், மக்கள் முடிந்தளவு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுப்பதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.