நகைகளை மீட்ட பருத்தித்துறை பொலிசார்
ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளதாகக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் SI.விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.