பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பெண் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரதான சந்தேகநபரான பெண்ணுடன், செவனகலவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் மூன்று நண்பர்களுடன் தங்கியிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பில் விசேட இரகசிய பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் உத்தரவுக்கமைய குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட இரகசிய பொலிஸ் குழு அப்பகுதிக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மொனராகலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரியாவார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த மே மாதம் 7 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தங்காலைப் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இருவரைக் கைது செய்த போது, இந்த கொலையின் பிரதான சந்தேகநபராக பெண் ஒருவர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையில் தகராறு இருந்ததாகவும் பொலிஸாரினால் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர் செவனகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய தங்காலை பிரதேச குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று தேடப்பட்டு வந்த சந்தேகநபரான பெண் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளனர்.
. கொலைச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நண்பர்கள் என கூறிய மூவரும் அவர்கள் வந்ததாக கூறப்படும் சொகுசு பிராடோ ரக வாகனமும் பொலிஸாரின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நண்பர்கள் என கூறிய மூவரும், பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட ஜீப் வண்டியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பவம் தொடர்பில் பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், பொலிஸ் மா அதிபர் சம்பவத்துடன் தொடர்புடைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |