சம்பந்தன் தொடர்பில் அவதூராக கருத்து வெளியிட்ட நபர்! எச்சரிக்கையுடன் விடுவிப்பு
சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்பு கோரியுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பந்தப்பட்ட முகப்புத்தக கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை
அத்துடன் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தன்னால் மீறப்பட்டுள்ளது என்பதை குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரியமை தொடர்பில் பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்திலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவதூறான கருத்து
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுவாக நாடாளுமன்றம் தொடர்பில் அவதூறாக கருத்துக்களை வெளியிட்டால் நாடாளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் காணப்படுவதாக குறித்த குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் எச்சரிப்பதற்கு அல்லது ஆறு மாதங்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள் நுழைவதை தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும், ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருப்பதாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் தீர்மானித்தால் அதனை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
