இலங்கையில் அச்சத்தை போக்க மீனை பச்சையாக உண்ட நபர்
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த வெளிநாட்டுக் கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் பலவிதமான கழிவுகள் கடல் நீரில் கலந்தமையினால் கடல்வாழ் உயிரினங்களை உணவுக்குப் பயன்படுத்துவோர் பின்வாங்கும் நிலை தொடர்ந்தும் நீடிக்கின்றது.
மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அந்த அச்சத்தைப் போக்குவதற்காக தென்னிலங்கை மீனவர்கள் இரண்டாவது தடவையாக சமைக்காத பச்சை மீனை உட்கொண்டு அச்சத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா கடல் பிரதேசத்தில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பல் தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, கடல்நீரில் அந்தக் கப்பலில் இருந்த கழிவுகள் மற்றும் பொருட்கள் கலந்திருக்கின்றன.
சுமார் 600 தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் கரையொதுங்கிய நிலையில் ஸ்ரீலங்கா கடலோரக் காவல்துறை, கடற்படையினர் என பல்வேறு தரப்பினராலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் தென்னிலங்கையின் வத்தளை, வெள்ளவத்தை, நீர்கொழும்பு உள்ளிட்ட கடலோரப் பிரதேசங்கள் மாத்திரமன்றி மன்னார் கடற்கரையிலும் மீன்கள், கடலாமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கிடக்கின்ற சம்பவங்களும் நாளுக்குநாள் பதிவாகி வருகின்றன.
அதன் காரணமாக மீன் மற்றும் கடல்வாழ் ஏனைய உயிரினங்களை கொள்வனவு செய்யவும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனிடையே கடல்மீன் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களை உணவுக்காக எந்த சந்தேகமும் இன்றி பெற்றுக்கொள்ளுங்கள் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்னிலங்கை மீனவர்கள் சிலரால் ஊடகங்களுக்கு முன்பாக சமைக்காத பச்சை மீனை உட்கொண்டு காண்பித்திருக்கின்றனர்.
கொழும்பு – பேலியாகொடை மொத்த மீன் விற்பனை நிலையத்தில் உள்ள கடலுணவு விற்பனையாளர்கள் இன்றைய தினம் இந்த செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கை கடற்பரப்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற வெளிநாட்டுக் கப்பல் தீப்பற்றியதோடு எண்ணெய் கசிவும் ஏற்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்திலும் கடல்வாழ் உயிரினங்களை உணவுக்கு எடுத்துக்கொள்வதை ஸ்ரீலங்கா மக்கள் தவிர்த்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவின் முன்னாள் மீன்பிடித்துறை இராஜாங்க
அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப்
வெதஆராச்சி, ஊடக சந்திப்பொன்றில் சமைக்காத பச்சை மீனை உட்கொண்டு மக்களை
தைரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.