பொதுஜன பெரமுன எம்மை கவனத்தில் கொள்வதில்லை : கவலை வெளியிட்டுள்ள திஸ்ஸ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை தான் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணிக் கட்சிகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகிறது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை என்றாால், மாற்று பயணம் குறித்து சிந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பண்டாரவளையில் நேற்று லங்கா சமசமாஜக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூறுவதற்கு கவலையாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எம்மை கவனத்தில் கொள்வதில்லை. உதாரணமாக ஒகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியோ, பிரதமரோ கூட்டணிக் கட்சித் தலைவர்களான எங்களை அழைத்து கூட்டத்தை நடத்தவில்லை.
வெட்டு, குத்து அரசியல் நடப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளின் 11 தலைவர்கள் வாரம் ஒரு முறை சந்தித்து மக்களின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி எம்மால் முடிந்ததை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எமது அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அப்படி செய்யவில்லை என்றால், நாங்கள் வேறு பயணம் குறித்து சிந்திக்க நேரிடும் எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.