மீண்டும் இலங்கைக்கு காத்திருக்கும் பொருளாதார சிக்கல் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், இலங்கையின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயம்
மத்திய கிழக்கு, போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தியிருந்த உலகளாவிய எரிபொருள் விநியோகச்சங்கிலி மற்றும் கப்பல் போக்குவரத்துப்பாதை என்பவற்றில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், இலங்கைக்கு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில், உணவுப்பொருட்களில் விலையேற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை நாட்டின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிவுற்ற நிலையில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அழுத்தங்கள் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் ரஜினி கமகே தெரிவித்துள்ளார்.