அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை! கமால் குணரட்ன
அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை தற்காலிக அடிப்படையில் இராணுவம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் நிரந்தரமாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடப் போவதில்லை எனவும், செலவு குறைக்கும் நோக்கில் இவ்வாறு அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று மாற்றமின்றி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வது எனவும் அதிலேயே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.