பலமிழந்த சமூகங்களின் ஒரே குரல் ஊடகங்களே! சாணக்கியன் எம்.பி
"அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன.
இத்தகைய குரலை நசுக்கவே தனியார் பத்திரிகை மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் தனியார் பத்திரிகை மீதான யாழ். பொலிஸாரின் வழக்குத் தொடர்பில் அவர் அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பத்திரிகை வடபுல மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக மிக நீண்டகாலமாக உரிமைக் குரல் எழுப்பிவருகின்றது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தையும், அவரது சொற்களையும் வெளியிட்டமைக்காக அப் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை விசனிக்கத்தக்கதும், கவலை தரும் விடயமுமாகும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முக்கியத்துவம் பெற்றுள்ள ஊடகத்துறையின் பணிகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த விடயம் அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் ஊடகங்களின் பெரும்பங்களிப்புகளுக்கு மத்தியில், இப்பத்திரிகையின் சேவை கடந்த காலங்களிலும், தற்போதும் சிறப்புற அமைந்துள்ளது. இப்பத்திரிகையின் குரல் வளையை நசுக்கி, மௌனிக்கச் செய்யும் செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையின் கீழ் பல தடவைகள் உதயன் அலுவலகம், தாக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் நெருக்குதல்களை சந்தித்து வந்தபோதிலும், நெஞ்சுரமும், தமிழ் பேசும் மக்களின் பேராதரவும் காரணமாக வீரியத்துடனேயே மீண்டெழுந்து வந்து அது மக்கள் குரலாக வீறுநடை போடுகின்றது.
எரிப்பு, துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல்கள் என்ற நிலைமாறி இப்பத்திரிகையின் குரலை ஒடுக்கும் செயற்பாடுகள் புதிய வடிவம் பெற்றுள்ளமையே அதன் மீதான வழக்குத் தாக்கலாகும். மக்களுக்குத் தகவல் வழங்குவது ஊடகங்களின் உரிமை எனும் அடிப்படையில் ஊடக தர்மத்துடன் செயற்பட்ட குறித்த பத்திரிகை நிறுவனத்தின் மீதான வழக்கை அரசு மீளப்பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.