பானுக ராஜபக்ஷவிடம் நாமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைய விளையாட்டு வீரர் என்ற விதத்தில், நாட்டிற்காக விளையாட இன்னும் காலம் உள்ளமையினால், அவசர தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக சவால்களை வெற்றிக் கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ, நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு குறித்து, கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர்களின் சிலரது ஒழுக்கமற்ற செயற்பாடுகளால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்மானத்தை மதித்து அவர்கள் செயற்பட்டதால் அவர்கள் மீண்டும் அணியில் இணைத்துகொள்ளப்பட்டனர். எவ்வாறாயினும் நாட்டுக்கு மீண்டும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க தான் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.