ஈரானின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்துள்ள பென்டகன்! சர்வதேச கடல் பகுதியில் பதற்றம்..
அமெரிக்கக் கடற்படை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தடையை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ஈரானுடன் தொடர்புடைய மூன்றாவது எண்ணெய் கப்பலை சிறைபிடித்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இன்று(24) நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி மசகு எண்ணெயைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது.
மத்திய கிழக்கில் பதற்றம்
கடந்த சில வாரங்களில் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்படும் மூன்றாவது கப்பல் இதுவாகும். இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கப்பலில் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள மசகு எண்ணெய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் வருமான ஆதாரங்களைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடைகளைச் செயல்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரான் கடுமையான விமர்சனம்
இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் செயல் "கடற்கொள்ளைக்கு" சமமானது என்று ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என எச்சரித்துள்ளது.

சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இத்தகைய கப்பல் சிறைபிடிப்பு சம்பவங்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.