கிழக்கை முழுமையாக சீரழித்துவிட்டார் கோட்டாவின் ஆளுநர்! சாணக்கியன் கடும் சீற்றம்
கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்திவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03.10.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர்
அவர் மேலும் கூறுகையில், “மயிலந்தனை மேய்ச்சல் தரை தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் தரைகள் என இதுவரை
வர்த்தமானி வெளியிடப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.
இதனால் பால் உற்பத்தி தொழில்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
வழக்குத் தாக்கல்
மயிலந்தனை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இந்த செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தோம்.
இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம். தற்போது மீண்டும் அவர்கள் அங்கு வந்துள்ளனர்.
எனவே, நாங்கள் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.
இதன்போது அதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, "இந்த விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கின்றோம்.
இந்த விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற
வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றோம்"
என குறிப்பிட்டுள்ளார்.