மாநகர முதல்வர்களுக்கு காவல்துறையின் கடமையைச் செய்ய அரசாங்கம் இடமளிக்காது! - அமைச்சர் ஜோன்ஸ்டன்
எந்தவொரு மாநகர முதல்வருக்கும் காவல்துறையின் கடமையைச் செய்ய அரசாங்கம் இடமளிக்காது என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் போது வடக்கில் காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு இயங்கின என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர முதல்வரை கைது செய்தமை தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர்,
மணிவண்ணனுக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.இதேவேளை யாழ்ப்பாண மாநகர முதல்வரை விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் வழங்க முயற்சித்ததாக குற்றம்சாட்டி கைது செய்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தாம், யாழ்ப்பாண முதல்வரின் ரசிகன் அல்ல.
எனினும் விடுதலைப்புலிகளின் காவல்படையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக அவரை சித்தரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி போலித்தனமானது. கொழும்பு மாநகர மன்றம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி மன்றங்களின் கீழ் வாகனத்தரிப்பிடம் மற்றும் அனுமதிச்சீட்டுக்களை வழங்குவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றுஅவர் குறிப்பிட்டார்.
இது அரசியல் பழிவாங்கல் என்று குற்றம் சுமத்திய அவர், அரசாங்கம் ஒருபுறம் நாட்டை இராணுவமயமாக்குகிறது, மறுபுறம் இனவாதத்தை உருவாக்குகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோரும் யாழ்ப்பாண முதல்வரை கைது செய்த நடவடிக்கை குறித்து விமர்சித்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவித்துள்ளார்.