ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காட்டியது அரசாங்கம்!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. காரணம் தற்போது சிறையிலிருப்பவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இளமைப்பருவத்தில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாவர்.
ஆனால் தற்போது அவர்கள் அந்த மனநிலையிலிருந்து மீண்டிருக்கக் கூடும். எனவே அவர்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை விடுப்பதற்கும் , புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.
என்மீது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவிய மொரிஸிடமிருந்து இதனை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவரை விடுதலை செய்தால் வரவேற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகை அரசாங்கத்தின் கழுத்தை நெறித்தமையே இந்த விடுதலையின் பின்னணியாகும். அதனாலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் வெள்ளை கொடி காண்பித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு வழியில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.