இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - புதிய திட்டம்
வரி செலுத்துவோர் வரப்பிரசாத அட்டைத் திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் விசேட சலுகைத் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும், தொடர்ச்சியாகவும் நிறைவேற்றும் வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வருமான வரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகளும் (Self-Assessment கொடுப்பனவுகள் உட்பட) உரிய திகதிக்கு முன்னரோ அல்லது திகதியன்றோ செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இரு பிரிவினர்
விண்ணப்பதாரரின் கடந்த கால வரி இணக்கத்தன்மை வரலாறானது சீரானதாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இந்தச் சலுகை அட்டைகள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன.

1. தங்க அட்டை (Gold Card): கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 5 மில்லியன் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்தியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
2. வெள்ளி அட்டை (Silver Card): கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 3 மில்லியன் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை வருமான வரி செலுத்தியவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்
இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தகுதியான வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ird.gov.lk ஊடாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் நேர்மையான வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.