20 ஆயிரம் கோடி ரூபாய் நிதிக்கான அனுமதியை கோரும் அரசாங்கம்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக இடைக்கால கணக்கீட்டு அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
கோவிட் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்யவும், கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார துறையினருக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 1.5 வீதமான நிதி எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. அந்த வாரத்தில் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தும் விதம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.