அஸ்ரா செனகா தடுப்பூசியின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது
சில நாடுகளில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோதும் “அஸ்ரா செனகா” கோவிட் வைரஸ் தடுப்பூசியின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசியுடன் ரத்தம் உறைதல் ஏற்படும் என்ற அச்சம் இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பு, அஸ்ரா செனகா தடுப்பூசியைத் தொடர அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் அஸ்ரா செனகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்ற பின்னர் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். தடுப்பூசி பெற்ற பின்னர் இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆறு பேரில் அவர்களும் அடங்குகின்றனர்.
எனினும் இந்த பிரச்சனையை பரிசீலனை செய்த உலக சுகாதார அமைப்பின் சுகாதார வல்லுநர்கள், இரத்த உறைவுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் தடுப்பூசியுடன் இணைக்கப்பட்ட இரத்த உறைவால் ஒரு மில்லியனுக்கு 4 தொடக்கம் 5 பேர் இறப்பதை தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தடுப்பூசியின் பாதுகாப்பை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், அஸ்ரா செனகா தடுப்பூசியின் செலுத்தலை தொடர அறிவுறுத்தியுள்ளதாகவும் பவித்ரா தெரிவித்தார்.
இலங்கையில் அஸ்ரா செனகா தடுப்பூசி பெறுவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு சுகாதார விளக்கம் வழங்கப்படுகிறது. தடுப்பூசி பெற்ற பிறகு மக்கள் ஏதேனும் அசௌகரியம் அல்லது பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுகிறார்களா என்பதை தெரிவிக்க ஒரு சிறப்பு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 0112 3415989 என்ற எண்ணில் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட ஒரு சிறப்பு பிரிவு கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் தடுப்பூசி காரணமாக பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு தொண்டை வலி, சுவாசக் கோளாறு அல்லது கால் வலி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு விளக்கமளித்தார்.
தடுப்பூசி வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தவில்லை என்று கூறிய அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இரண்டாவது செலுத்துகையை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
முதல் தடவையாக அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகை மே முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் என்று அவர் கூறினார்.
எனவே தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதார
அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார்,
ஏனெனில் இது தடுப்பூசி செயல்முறை குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை
முறித்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.