கொழும்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்
கொழும்பு - டாம் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - டாம்வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டில் இன்று அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தீயணைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதேவேளை, தீப்பரவலினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை, எனினும் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீப்பரவல் தொடர்பான மேலதிக விசாரணைகளை டாம் வீதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.