இலங்கையில் இனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமையை வெளியிடுவது அவசியம்
இலங்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை வெளியிட வேண்டும் என்பது அவசியம் என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி தகமை தொடர்பான தகவல்களை, அவர்கள், வழங்குகின்ற போது அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பில், கோரப்பட்டபோதும், இதுவரையான காலப்பகுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தமது கல்வித் தகைமைகளை வெளியிடவில்லை என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புக்கு உட்பட்ட விதத்தில் தமது கல்வித்தகைமைகளை வெளியிடுவதற்கு பொறுப்புக்களை கொண்டிருக்கவில்லை என்றும், அது தொடர்பாக அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே கடந்த மே 10 திகதியன்று நாடாளுமன்ற செயலாளர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்.
அந்த கோரிக்கைக் கடிதத்தில், தாங்கள் விரும்பினால் தங்களுடைய கல்வித் தகைமைகளை வெளியிடுமாறு கேட்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கு பதில் வழங்கவில்லை.
குறிப்பிட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் இருந்து எந்தவித பதிலும் வராததை அடுத்தே கடந்த வாரம் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை வெளியிடுவது அவசியம் என்ற வலியுறுத்தலை விடுத்துள்ளது.
அத்துடன், இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, இந்திய உயர்நீதிமன்றம் 2002ம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பை கோடிட்டு காட்டியிருக்கிறது.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் மற்றும் குற்றவியல் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விடயங்களை பெற்றுக் கொள்ளும் தகவல்களாக அமையாது என்று இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் உரிமை அறியும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது, இலங்கை நாடாளுமன்றத்தின் கடமையாகும் என்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த கம்மம்பில மற்றும் ஆணையாளர்களான கிசாலி பின்டோ ஜெயவர்த்தன, எஸ். ஜி புஞ்சிஹேவா, கலாநிதி செல்வி திருச்சந்திரன் மற்றும் நீதிபதி ரோஹானி வெல்கம ஆகியோர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்கள்.