மாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் நகரசபைத் தலைவரின் பணிகளைப் பொறுப்பேற்றார் உப தலைவர்
கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவித்தலின்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இதுவரை அச்சபையின் உபதலைவராக இருந்து வந்த மீராலெப்பை ரெபுபாசம் இப்போது ஏறாவூர் நகரசபைத் தலைவரின் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.ஆர்.ஷியாவுல்ஹக் தலைமையில் நேற்று ஏறாவூர் நகரசபையில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் அநுராதா யகம்பத் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,
ஏறாவூர் நகரசபையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை முடியும் வரை இறம்ழான் அப்துல்வாசித் ஏறாவூர் நகரசபையில் தலைவர் பதவியை வகித்தலை உடனடியாக தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், தலைவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்குமான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏறாவூர் நகரசபையின் உபதலைவரான மீராலெப்பை ரெபுபாசம் அவர்களுக்குக் கட்டளையிடுகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் அலுவலர்கள், அவரது ஆதரவாளர்களான நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய ரெபுபாசம், பல கட்சிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஆண், பெண் அங்கத்தவர்களை கொண்டுள்ள இச்சபையின் நடவடிக்கைகள் இனிமேல் எந்த வித பாகுபாடும் இன்றி கலந்தாலோசனையின் பேரில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நகரசபையின் பணிகள் நகரசபையின் சகல உறுப்பினர்களின் கலந்தாலோசனைகளோடும் நன்கு திட்டமிடப்பட்டு இந்த நகரம் அபிவிருத்தி செய்யப்படும்.
அபிவிருத்திகளை மேற்கொண்டு செல்வதில் சகலரதும் ஒத்துழைப்பை நான் வேண்டிநிற்கின்றேன்.
நான் என்ற அகங்காரம் இனி தலைகாட்டாது, அதற்குப் பதிலாக நாம் என்ற ஒற்றுமையும் நம்பிக்கையும் இனி இந்த நகரத்தைக் கட்டியெழுப்பும் எனத் தெரிவித்துள்ளார்.








ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam