பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்
வயது வந்தவர்களின் சமூக சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடத்தைகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் 100 சதவீதமான பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மக்களில் சிலர் சுகாதார பாதுகாப்பில் இருந்து விலகியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது என ஒன்றியத்தின் உறுப்பினர் மருத்துவர் சன்ன டி சில்வா(Channa De Silva) கூறியுள்ளார்.
‘‘இது மிகவும் பயங்கரமான நிலைமை. இதனால் கடந்த புத்தாண்டு கொத்தணிப் போல் மீண்டும் கோவிட் கொத்தாணி உருவாகக் கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி வழங்கல்கள் மூலம் கோவிட் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகள் மற்றும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தடுப்பூ மூலம் நோயை நூற்றுக்கு நூறு விதம் கட்டுப்படுத்துவது சிரமம். சுகாதார பழக்க வழக்கங்களையும் நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்ற வேண்டியது அவசியம். தொடர்ந்தும் டெல்டா வைரஸ் திரிபு சமூகத்தில் பரவி வருவதால், எதிர்காலத்தில் நிலைமை பயங்கரமானதாக இருக்கலாம். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சமூகத்திற்குள் நோய் பரவுவதன் அடிப்படையிலேயே மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும். பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை முதல் இடத்தில் உள்ளது.
இன்னும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத பிள்ளைகள் இருப்பார்கள் என்றால், அவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை‘‘ எனவும் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.