சஹ்ரானின் சாரதி உட்பட நான்கு பேருக்கு பிணை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த உத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் நேற்று (26.09.2022) வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம்
கடந்த 2018ஆம் ஆண்டு வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பாக சஹ்ரானின் சாரதி கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் மொஹொமட் பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் மொஹொமது இம்ரான், ஹய்யாது மொஹொமட் மில்ஹான் ஆகிய நான்கு பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பிணையில் விடுதலை
இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு இவர்கள் சார்பில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம். முகமட் அமீன் இவர்களை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தலா 35000 ரூபா பண பிணையிலும், தலா 100000 ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வழக்கில் ஜனவரி 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.