ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை சிக்க வைக்கும் திறன் சி.ஐ.டிக்கு இருந்தது - பாலித ரங்கே பண்டார
சுதந்திரமாக செயற்பட அனுமதித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உண்மையான குற்றவாளிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்திருப்பர் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று செய்தியாளர்கள் மத்தியில் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு படுகொலை குறித்து முறையான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதே இன்றுள்ள பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு கூட தனது கடமையை திறம்பட செய்யவில்லை.
இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றவர்களை விமர்சிக்காமல் பொறுப்பை ஏற்க வேண்டும், முன்னாள் அரசாங்கத்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பை ஏற்றுக்கொண்டதைப் போன்று மைத்ரிபால சிறிசேனவும் தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வேறுப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கின்றார்.
அதே நேரத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் வேறு தீர்மானங்களை அறிவித்துள்ளது.
எனவே இதுபோன்ற சூழ்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஏன் நிதி வீணடிக்கப்பட்டது என்று பாலித ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.