விடுதலைப் புலிகளின் காலத்தின் பின்னர் யாழில் ஏற்பட்டுள்ள மாற்றம்
விடுதலைப் புலிகள் தமிழை காதலித்தனர். அதனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்களை வெகு விமர்சையாக நடத்தினோம். விடுதலைப் புலிகளின் காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் தமிழுக்காக வேறு எந்த விழாக்களும் பெரிய அளவில் நடத்தப்படவில்லை என அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் தமிழுக்கு பெயர் போன ஒரு பிரதேசம். பல்துறை அறிஞர்களையும் பல்துறை மகான்களை உருவாக்கிய பெருமை யாழ்ப்பாணத்திற்கு உரியது.
இவ்வாறு பல பெருமைகளை உடைய யாழ். மண் இன்றைய காலப்பகுதியில் பல தடுமாறல்களை எதிர்நோக்கி செல்வதாக அறிகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் முன்னர் இடம்பெற்ற மிகப்பெரிய தமிழ் விழாக்கள் மூன்றில் நான் பங்கெடுத்தேன்.
அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ். மாநகரசபை தமிழுக்கு பெருமை சேர்க்கும் முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.