விமான நிலையம் ஊடாக வெளியில் செல்லும் பெருந்தொகை டொலர்கள்
இலங்கை அரசுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான நாட்டுக்குள் இருக்கும் டொலர்களை பாதுகாக்க வேண்டுமாயின் விமான நிலையம் ஊடாக நாட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் பெருந்தொகை டொலர்களை தடுத்து நிறுத்த உடனடியாக நவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை விமான பயணி ஒருவர் 10 ஆயிரம் டொலர்களை கொண்டு செல்ல இன்னும் சட்டரீதியான அனுமதி உள்ளது.
இலங்கை விமான பயணிகளில் 99 வீதமானவர்கள் 10 ஆயிரம் டொலர்களை தொடர்ந்தும் எடுத்துச் செல்கின்றனர்.
இலங்கையர்கள் நாட்டில் இருந்து கொண்டு செல்லும் டொலர்கள் அவர்கள் நாடு திரும்பும் போது, விஸ்கி போன்ற மதுபானங்களை கொண்டு வருவதால், இலங்கையின் டொலர்களில் பெருந்தொகை மதுபானங்களுக்கு செலவாகின்றது.
வெளிநாடு செல்லும் நபர்களுக்கு ஆயிரம் டொலர்கள் மாத்திரமே வழங்கப்படும் என தனியார் வங்கிகள் கூறினாலும் பல வர்த்தகர்கள் டொலர்களை வழங்கும் வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு டொலர்களை கொள்வனவு செய்து நாட்டில் இருந்து எடுத்துச் செல்கின்றனர்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்ய டொலர்களை சேமிக்க வேண்டுமாயின் கூடிய விரைவில் சட்டத்தை உருவாக்கி, விமானத்தின் மூலம் வெளியில் செல்லும் டொலர் தொகையை தடுத்து நிறுத்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி மேலும் கூறியுள்ளார்.