பருத்தித்துறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு
பருத்தித்துறை - சுப்பர்மடத்தில் முதியவர் ஒருவர் சடலமாக காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கரவெட்டி பகுதிக்கு தனது திருமணமான மகனிடம் வருகை தந்தவர் என்றும் தெரியவருவதுடன் வழி தவறி சுப்பர்மடம் பகுதிக்கு சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.




