காணாமல்போனதாக கூறப்படும் பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கைப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri