பெலாரஸ் – லித்துவேனிய எல்லையில் மீட்கப்பட்டுள்ள இலங்கையரொருவரின் சடலம்
பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் உயிரிழந்த நிலையில், 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் காணப்பட்ட நிலையில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் இலங்கையை சேர்ந்த 29 வயதானவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான கையடக்க தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற குடியேற்றவாசிகளை லித்துவேனிய பாதுகாப்பு படையினர் பல முறை தடுத்துள்ளனர். அவ்வாறு முயற்சித்த குழுவில் இந்த நபர் இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலோட்ஸ்க் எல்லைக்குழுவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி Denis Glebko தெரிவித்துள்ளார். இந்த குழுவினரும், புலனாய்வாளர்களுக்கும் உள்ளூர்வாசிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் இலங்கை நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தடயவியல் பரிசோதனை பெலாரஸ் தடயவியல் நிபுணர்கள் குழுவால் மேற்கொள்ளப்படவுள்ளது. விசாரணைக்குழுவின் Braslav மாவட்ட அலுவலகம் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் Denis Glebko குறிப்பிட்டுள்ளார்.