கத்தோலிக்கப் பெண்ணின் உடல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!
ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை நல்லடக்கப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து, முதன் முறையாக கத்தோலிக்கப் பெண் ஒருவரின் சடலமும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது நாட்டின் இன ஐக்கியத்துக்கும் மனிதாபிமானம் மரணித்து விடவில்லை என்பதற்கும் சிறந்தசான்றாக அமைந்திருக்கிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
“எந்த மதத்தவராக இருந்தாலும் விருப்பத்துக்கு மாறாக எரிக்கப்படும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருந்து ஓயாது நடவடிக்கை மேற்கொண்டவன்” என்றார்.
ஜா-எலையைச் சேர்ந்த 60 வயதான அந்தப் பெண்மணி, கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி மார்ச் 08ம் திகதி மரணமடைந்தார்.
அவரின் உடல் சனிக்கிழமை ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுவரும் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல்வேறு பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கோவிட் -19 பூதவுடல்கள் 45 ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இன, மத பேதமின்றி அனுமதி வழங்கப்படுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.