அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆத்திரமும் கோபமும் அதிகரிக்கும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைக்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நபர்களே முற்றாக பொறுப்பேற்க வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலாபத்திற்கு தவளைகளை சேகரிப்பது போல் சிறிது சிறிதாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்து வழங்குவதில் பயனில்லை.
இதனால், மக்களின் அரசாங்கத்தின் மீதான ஆத்திரமும் கோபமும் மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே அரசாங்கத்தின் மீது பெரிய வெறுப்பு ஏற்படுகிறது.
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நபர்களே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதனால், ஜனாதிபதி தற்போதாவது இந்த வேலை செய்ய தெரியாத டாசன்களை கைவிட்டு, அனுபவமுள்ள நபர்களை இணைத்துக்கொண்டு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முறைப்படுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.