தையிட்டியில் நிறைவுபெற்ற போராட்டம்: பொலிஸார்-போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம் (Video)
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (02.07.2023) மாலை 03 மணியளவில் நான்காம் கட்டமாக ஆரம்பமான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (03.07.2023) மாலை-05.45 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
போயா தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையிலேயே நேற்று (03.07.2023) இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்புப் போராட்டம்
கடந்த பல தடவைகள் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள காணியைப் போராட்டம் நடத்துவதற்கு வழங்கிய காணியின் உரிமையாளர் பலாலிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுப் பலாலிப் பொலிஸாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்த காரணத்தால் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் நேற்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இரண்டாவது நாளாக நேற்று திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலது பக்கத்தால் குறித்த விகாரைக்கு இராணுவ வாகனங்கள் செல்வதை அவதானித்த போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென அங்கிருந்து பேரணியாகச் சென்று வீதியோரமாகப் புதிதாகப் போராட்டக் களத்தை ஆரம்பித்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கைவிட்டு அங்கிருந்து அகன்றனர்
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட களத்திற்கு விரைந்து சென்ற பலாலிப் பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்துப் பொலிஸ் அராஜகம் ஒழிக! எனப் போராட்டக்காரர்கள் உரத்துக் குரலெழுப்பியதையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களுடன் முரண்படுவதைக் கைவிட்டு அங்கிருந்து அகன்றனர்.
இதனையடுத்து இரண்டு பகுதிகளிலும் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்றைய தினம் இரண்டு பிரிவுகளாகப் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தமையால் குறித்த விகாரைக்குச் செல்வோரின் தொகை சடுதியாக குறைவடைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri
