காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சித்தால் எழுந்த சர்ச்சை
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கூட்டம் இன்று(05.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரசபையின் ஆட்சிப் பொறுப்பை வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய தரப்பினருக்கும் எதிர்க்கட்சி நகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில், நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகள் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உச்சக்கட்டத்தை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகரசபை உறுப்பினர்களான கலீல் பாரி, பர்ஷாத் மற்றும் முஜீப் ஆகியோர் கடந்த காலங்களில் காத்தான்குடி நகரசபையின் நிர்வாக நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகளின் பயன்பாடு தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சில அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் அரச நிதிகள் மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகள் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள், பாதுகாப்புத் தரப்புகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மூன்று உறுப்பினர்களும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்களது பங்கேற்பு உரிமையை உறுதிப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுங்கட்சி பிரதிநிதியுமான கந்தசாமி பிரபுவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதில், காத்தான்குடியின் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்காக தங்களுக்கு கூட்டங்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
உறுப்பினர்களிடையே பதற்ற நிலை
இதற்கு முன்னதாக, ஜூன் 2 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குறித்த மூன்று நகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பையும் கவலையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
அப்போது, காத்தான்குடியில் சட்டத்திற்கு முரணான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், சில தரப்பினர் தங்களை சட்டத்திற்கு மேலான அதிகாரம் கொண்டவர்களாகச் செயல்படுத்த முயலுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த மூன்று உறுப்பினர்களும் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 9.00 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானபோது, கூட்டத்தில் குறித்த மூன்று உறுப்பினர்கள் பங்கேற்பதை எதிர்த்து சில தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில் கூட்ட அரங்கில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டத்தை நடத்த பயன்படுத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மற்றும் மைக் அமைப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குறித்த மூன்று உறுப்பினர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் மேலும் தீவிரமடைந்த நிலையில், கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரை தாக்க முயற்சி இடம்பெற்றதாகவும் சில தரப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் இதுவரை நிறைவுபெறவில்லை.
விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை
சம்பவத்தின் போது அங்கு இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி சார்ந்த சில நபர்களும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை அவசியம் என அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, ஜனநாயக உரிமைகள், உள்ளூராட்சி நிர்வாக நடைமுறைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் அனைத்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அரசாங்கம், மாகாண நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்க அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.