வட பகுதி கடற்றொழிலாளர்களின் கண்ணீர் மடல்
வட பகுதி கடற்பரப்பிற்குள் எம்மை தாண்டி வரும் இந்திய படகுகளால் எமது கடல் வளம் அழிக்கப்பட்டு வருகின்றது. நித்தமும் எமது தொழில் வளங்களும் அழித்து சேதமாக்கப்பட்டும் வருவது தொடர் கதையாக நீடிக்கிறது என வட பகுதி தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவ்வாறான கையறு நிலையில்தான் மீனவ சமுதாயம் தன்னை வருத்தி இன்றுடன் ஐந்து நாட்களாக தொழில் மறிப்பு மற்றும் தொடர் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக வட பகுதியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் பதவி வகிக்கும் நிலையில் தான் இந்த துயரம் நடந்தேறி வருகின்றது.
அமைச்சர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வட பகுதி மீனவ சமுதாயம் இந்த துயரத்திற்கு நிரந்த தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து வந்துள்ளோம்.
நாம் கோருவது இலங்கைத் தீவின் வடக்கு கடற்பரப்பில் எம்மை மீறி நுழையும் இந்தியப் படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமு் என்பதே. இந்த கோரிக்கையானது இலங்கையின் கடற்பரப்பின் மீதான் இறையான்மையை இலங்கை கடற்படை கட்டிக்காக்க வேண்டும் என்பதுடன் அதன் மூலம் வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரத்திற்கு தீர்வையே வலியுறுத்தி நிற்கின்றது.
எமது நியாயமான இந்த கோரிக்கையை நிறைவேற்றும் உத்தரவாதத்தையே தர முடியாத நிலையில் அமைச்சரால் எமது துயரத்திற்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுத் தர முடியும் என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த விடயத்திற்குப் பொறுப்பானவர் என்ற வகையில் இந்தியப் படகுகளின் சட்டவிரோத உள் நுழைவை தடுக்க முடியாவிடில் அப் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது அர்த்தமில்லை என்பதே வட பகுதி மீனவ சமுதாயத்தினராகிய எமது உறுதியான நிலைப்பாடு ஆகும்.
தமிழர் ஒருவர் அமைச்சராக இருந்தும் தீர்வு கிட்டாத நிலையில் எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசியல் கட்சி பேதமின்ிற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தின் காத்திரத் தன்மையை உணர்ந்து நிரந்தர தீர்வை காணும் வகையில் செயற்படுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்.
கடல் நீரோடு நீராக கரைந்து காணாமலேயே போகும் மீன்களின் கண்ணீர்த் துளிகளாக வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரமும் எமக்குள்ளாகவே கரைந்தோடும் அவலம் தொடர்கிறது.
இந்த துயரத்திற்கு நிரந்தர தீர்வைப் பெற்று எமது வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பாதுகாக்குமாறு வினையமாக வேண்டி நிற்கின்றோம்.
இந்திய படகுகளின் எல்லை மீறாமல் மீண்டுமொரு அனர்த்தம் வடக்கக் கடலில் நிகழுமாயின் எமது போராட்டம் மீண்டும் அறவழியில் தொடரும்.
எமது இந்த போராட்டம் எமது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காகவே! தமிழக உறவுகளுக்கு எதிரானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



