கஸ்ட பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்
அதிகஸ்ட பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகஸ்ட பிரதேசங்களில் 3 வருடங்கள் கடமையாற்றினால் போதும் என்றவர்கள் இன்று, 6 வருடங்கள் கடந்தும் எமக்கான இடமாற்றங்கள் வழங்கவில்லை.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பல தரப்பினரிடமும் எமது கோரிக்கைகளை முன்வைத்த போதும், யாருமே சரியான தீர்வைப் பெற்றுத்தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைக்க வருகை தந்திருந்த போது, ஆளுநரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும்,ஆளுநரின் செயலாளரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
6 வருடங்கள் தாண்டியும், இந்த கொரோனா காலப்பகுதியிலும், அதி கஸ்ட பிரதேசங்களுக்கு சென்று தாம் பணியாற்றியதாகவும் ,பல முறை இடமாற்றம் தொடர்பில் கல்வி வலயம் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, பல வாக்குறுதிகளை தந்ததாகவும் அந்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை என்றும், அவர்கள் குற்றஞ்சாட்டியதுடன், தற்போதுள்ள வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனை சந்தித்த போது,கொரோனா சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத நிலை காணப்பட்டதாகவும், தற்போது ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்து இடமாற்றம் வழங்குவதற்கான ஆளணிகள் இல்லாத பிரதேசங்களில் மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக தமது இடமாற்றம் தொடர்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதாகவும், தீர்வுகள் எட்டப்படவில்லையாயின் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.