யாழில் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டம்(Photo)
போராட்டம்
யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாம் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபடுவதற்கு பாடசாலைக்கு வர எரிபொருள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எச்சரிக்கை
எனினும் தமக்கு எரிபொருள் கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், எரிபொருள் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அம்பாறை
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கோரி அம்பாறை - கல்முனை பகுதியில் ஆசிரியர்களின் போராட்ட ஊர்வலம் ஒன்று நேற்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி சேவையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்த ஆர்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த போராட்டத்தில் “கொழும்பு பாடசாலைக்கு மட்டுமா எரிபொருள் பிரச்சினை” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை முன்பாக ஆரம்பமான இந்த போராட்டமானது பிரதான வீதி வழியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்து நிறைவடைந்துள்ளது.
எனினும் இந்த போராட்டம் அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தின் முன்பாகவும் சிறிது நேரம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையிலான ஆசிரியர் குழு ஆர்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் சுமூகமாக தீர்வு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி-பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம்
இதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு முன்பாக ஆசிரியர்களின் போராட்டமொன்று இன்று(20) இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
“இதன் போது ரோட்டில் நிற்பதா? போட்டில் நிற்பதா?”, “பெற்றோல் அடிப்பதா?விடைத்தாள் திருத்துவதா?” போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
கவனயீர்ப்பு ஈடுபட்ட ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் எமக்கு வெள்ளை நிற அட்டை ஒன்று எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று அந்த அட்டையினை காண்பிக்கும் போது அவர்கள் எம்மை கேவலமாக திட்டி நமக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று அனுப்புகிறார்கள்.
இதனால் நாங்கள் எமது வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளை சரிவர செய்ய முடியாதுள்ளது. அனைவரையும் போல நாங்களும் வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் வரிசையில் நின்று நாங்கள் எரிபொருளை கொள்ளை செய்து வினாத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளுக்கு செல்ல முடியாது.
அத்துடன் வினாத்தாள்களை மதிப்பீடு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வேளையில் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது. ஏனென்றால் நாங்கள் எங்களது வீடுகளுக்குச் சென்று மிகுதி வேலைகளைச் செய்ய வேண்டும்.
மிகுதி வேலைகளை செய்துவிட்டு அடுத்த நாள் வினாத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளுக்கு செல்ல வேண்டும். எனவும் வரிசையில் நின்று எரிபொருளை நாங்கள் கொள்வனவு செய்வது இயலாத காரியம்.
எனவே தமது இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு நமக்கு எரிபொருள் வழங்குவதற்கு புதிய பொறிமுறையை விரைவில் அமைத்துக் கொடுத்தால் மாத்திரமே நாங்கள் மன பூரண திருப்தியுடன் இந்த வினாத்தாள் மதிப்பீடு பணிகளில் ஈடுபட முடியும்” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்-கஜிந்தன், தீபன்