சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கம்: இலங்கை ஆசிரியர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் பாடசாலை மாணவர்களை தனியார் துறைகளில் தொழில் புரிவதற்கு இடமளித்தால் மாணவர்களின் இடைவிலகும் தொகை அதிகரிக்கும் அதேவேளை சிறுவர் தொழிலாளர்கள் உருவாகும் நிலையும் ஏற்படும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் மட்டக்களப்பில் வைத்து நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் கருத்து
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பாடசாலை மாணவர்கள் தனியார் துறைகளில் மாதாந்தம் 20 மணிநேரம் தொழில் புரிவதற்கு இடமளிக்க வேண்டுமெனவும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல கருத்துக்கள் பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் இது தொடர்பான நிலைப்பாடு என்னவெனில், ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டால் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற ஒரு வழிமுறை அல்லது திட்டமிடல் இருப்பது அவசியம் ஆகும்.
ஆசிரியர் சங்கத்தினரால் முன்வைக்கப்படும் விதிமுறைகள்
மாணவர்கள் எவ்வாறான நிறுவனங்களில் வேலைக்கு செல்ல வேண்டும், எவ்வாறான வேலையை எத்தனை மணித்தியாலம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் மற்றும் இவர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் எதுவும் இன்றியே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பலர் பொருளாதார ரீதியாக பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனவே மாணவர்கள் பணத்தினை கையில் பெற்று கொண்டதன் பின்னர் ஈர்க்கப்பட்டு முற்றாக முழுநேர வேலையில் ஈடுபடுவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய சூழலில் பொருளாதார நிலைமையை சீர் செய்ய தங்கள் குடும்ப சுமைகளை கையில் எடுத்துக்கொண்டுள்ள பல சிறுவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறான சிறுவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கட்டுக்கோப்பு இருத்தல் வேண்டும்.
கல்வித்துறை சார்ந்த சிக்கல்கள்
இல்லையேல் கல்வியில் இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரிப்பதோடு குறைந்த சம்பளத்தில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்ற நிலையும் ஏற்படும்.
உலகலாவிய ரீதியில் சிறுவர் தொழிலாளர் உருவாவதை பலரும் ஏற்றுகொள்ளவில்லை.
இந்த
நிலையில் கோவிட் 19 காரணமாக கல்வியை இழந்து நிற்கும் மாணவர்களின் கல்வி
கற்கும் உரிமையையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்த திட்டம்
முன்வைக்க பட வேண்டுமே தவிர முன்னேற்பாடு இன்றி முன்வைக்கப்படும் இந்த
திட்டத்தால் பாரிய கல்வி சார்ந்த சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழல்
ஏற்படும்”என தெரிவித்துள்ளார்.