கூடுதல் வரி விதிக்கப்பட முன் இறக்குமதிக்குத் தயாரான வாகனங்களுக்கும் வரி - வெளியான தகவல்
வாகன இறக்குமதி தொடர்பில் 50வீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்ட 15ஆம் திகதிக்கு முந்தைய நாளான, 14ஆம் திகதி திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதும் குறித்த கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50வீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது விதித்துள்ள 50வீத கூடுதல் வரி
15ஆம் திகதி, ஜனாதிபதி இந்தக் கூடுதல் கட்டணத்தைக் குறிப்பிட்டு ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
எனினும் அதற்கு முன்னர், ஜனாதிபதிக்கு நெருக்கமான 3 நிறுவனங்கள் 14ஆம் திகதி 4,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் பத்திரங்களைத் திறந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

அதன்படி, ஜனாதிபதியின் இந்த முடிவை அந்த நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
ஆனால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கு முன்னதாக கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ள ஒரு சில வாகனங்களுக்கும் ஜனாதிபதி தற்போது விதித்துள்ள 50வீத கூடுதல் வரி விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
வாகன இறக்குமதி
அதன்படி, ஒரு வாகனத்தைத் தயாரித்து, அதன் அடித்தட்டு (சேசிஸ்) எண்ணைக் கடன் பத்திரத்தில் சேர்ப்பதற்குப் பல வாரங்கள் ஆவதால், வாகனத்திற்கான இறக்குமதிக் கட்டளை இடப்பட்ட திகதியில் வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டு சில நாட்கள் அல்லது வாரங்களின் பின்னரே குறித்த கடன் பத்திரத்தில் வாகன அடித்தட்டு இலக்கம் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்படுவது வழமையாகும்.
அத்துடன் கடன் பத்திரங்களில் அடித்தட்டு இலக்கம் அல்லது எந்தவொரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் குறித்த வாகனங்களுக்கும் 50வீதம் மேலதிக வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுங்கப் பிரிவினருக்கு விசேட சுற்று நிருபம் ஊடாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முடிவின் மூலம், மே 14ஆம் திகதி கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களும் கூடுதல் கட்டணத்தை மட்டுமல்லாமல், அது தொடர்பான பிற வரிகளையும் செலுத்த வேண்டியிருக்கும்.