இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழருக்கு சுவிசில் இழப்பீடு கோரி வழக்கு
சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று 2022ஆம் ஆண்டு மீண்டும் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்பட்ட தழிழர் ஒருவருக்காக சுவிட்சர்லாந்து சட்டத்தரணிகள் இழப்பீடு கோரி வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.
பீற்றர் மோறோ எஸ் ஏ (Peter & Moreau SA) என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எமா லைடென் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் (Emma Lidén மற்றும் Bénédict de Moerloose) ஆகியோர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்துடன் (ITJP) இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கானது சுவிட்சர்லாந்து தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்குப் பலவந்தமாக திருப்பி அனுப்புவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும் துன்புறுத்தலின் நிரூபிக்கப்பட்ட முழுமையான ஆபத்தினைக் கருத்திற் கொண்டு நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சுவிட்சர்லாந்தினைக் கேட்டுள்ளது.
“அந்த நேரத்தில் எமது கட்சிக்காரரினால் இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் காட்டும் பலமான ஆதாரங்கள் சுவிட்சர்லாந்தின் குடியகல்விற்கான அரச செயலகத்திடம் (SEM) இருந்தது. அவர்கள் துன்புறுத்தலுக்கான ஆபத்தினை ஆராய மறுத்துவிட்டார்கள்.
இழப்பீட்டுத் தொகை
கட்சிக்காரரின் கோப்பில் இருந்த புதிய மற்றும் எச்சரிக்கும் தகவல்களையும், மனஉளைச்சலின் அவரது தெளிவான வெளிப்படுத்தல்களையும் புறக்கணித்ததன் மூலம் அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்ற பின்னர் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படும் நிலைக்கும் மீண்டும் உளநிலை பாதிக்கப்படும் நிலைக்கும் அவரை அவர்கள் ஆளாக்கியுள்ளார்கள்” என எமா லைடென் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது இ.எஸ் இற்கு ஏற்பட்ட தார்மீக பாதிப்புகளுக்காக 150,000 சுவிஸ் பிராங்குகளை இழப்பீடாக கேட்பதுடன் சித்திரவதைக்கு எதிரான தீர்மானம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கீழான கடப்பாடுகளுக்கு இணங்க சுவிட்சர்லாந்து அவரது வழக்கினை சரியான முறையில் பரிசீலிக்கத் தவறிவிட்டது என வாதிடுவதுடன் குடியகல்விற்கான அரச செயலகத்தினை அதற்கு பொறுப்பாளியாக்கிறது.
“ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு தமிழர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டு அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நான் பார்ப்பது இ.எஸ் இன் வழக்கில் மட்டுமல்ல.
குடும்பத்தின் பாதுகாப்பு
புகலிடக்கோரிக்கையினை ஆராயும் அதிகாரிகள் வாழ்வு மற்றும் சாவு சம்பந்தமான வழக்குகளை கையாளுகின்றார்கள். அத்துடன் இந்த வழக்குகள் ஆராய்வதற்கு சிக்கலானதாக இருப்பினும் அவர்கள் அந்த வேலையினை மிகவும் கவனத்துடன் செய்வது அவசியமானதாகும்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக தன்னை வெளிக்காட்ட விரும்பாத இந்த நபரான, இ.எஸ் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறார். அங்கு அவருக்கு 2024 இன் பிற்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இ.எஸ் தனக்கு நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் ஒரு சுயாதீன சட்ட வைத்திய அறிக்கை ஒன்றினைப் பெற்றிருந்தார்.
இவ்வாறான ஒன்றினை சுவிட்சர்லாந்தில் பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் ஐக்கிய இராச்சியத்தில், உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் நடாத்தப்பட உளவியல் சமூக ஆதரவு செயற்திட்டத்திலும் இணைந்து கொண்டார். போதிய நிதி உதவி இன்மையால் இந்த ஆதரவுச் செயற்திட்டம் மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளது.

சீனா கடற்றொழிலாளர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் தெரிவிப்பு!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 18 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.