தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஜனாதிபதி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சிறீ பிரசாந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (26.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுக்கான எவ்வித தீர்வும் கிடையாது. இது தென்னிலங்கை மக்களுக்கான வெற்றியாகும்.
அவர்களுக்கான தேர்தலாகவே அமையும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனவாதத்தினால் தூண்டுகைக்கு உட்படுத்தப்பட்டு அரசியல் தீர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அபிவிருத்தி திட்டங்கள்
பொது வேட்பாளர் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைந்த ஒப்பந்தம் என்பதும் மக்களை ஏமாற்றும் அரசியலுக்கான மாயையாகத்தான் இறுதியில் மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
திருகோணமலை மாவட்டம் கடந்த காலங்களில் அபிவிருத்தியிலும் சரி ஆக்கிரமிப்பு போன்றவற்றிலும் தோல்வி கண்டுள்ளது.
தற்போது வடக்கு கிழக்கு உட்பட திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம், மூதூர், வெருகல் உள்ளிட்ட பிரதேச செயலக பகுதியில் அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மொத்தமாக 5 மில்லியன் ஒதுக்கியுள்ள நிலையில் அபிவிருத்தி திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க மறைந்த தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு எதுவும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |