தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை! ரவிகரன் எம்.பி விடுத்துள்ள அழைப்பு
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாளையதினம் 04.02.2026 யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள "ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்" என்னும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஊடகங்களுக்கு இன்று(3.2.2026) கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒடுக்குமுறைகள்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாளானது தமிழ் மக்களால் நேசிக்கப்படக்கூடியதாகவோ, கொண்டாடக்கூடியதாகவோ இல்லை.

தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லாத ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. ஒடுக்குமுறைகள் மிக அதிகமாகி வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களே ஏராளம்.
நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள்கூட முன்னைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆனால் இதுவரை எமக்குத்தான் விடிவில்லாமல் அலைகின்றோம் எனத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள்.
அழைப்பு
தமிழர் தாயகப்பரப்புகளில் தொடர்சியாக நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தோடு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்குவதற்காக திட்டமிட்டு பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் எவ்வாறு இலங்கையின் சுதந்திரதினத்தை கொண்டாடுவது என்ற எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
எனவே பல்கலைக் கழக மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு அணிதிரண்டு ஆதரவு நல்குமாறு அனைத்து தமிழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.