வெளிநாடொன்றில் தமிழ் இளைஞருக்கு பிறப்பிக்கவுள்ள மரண தண்டனை ரத்தாகுமா? வலுக்கும் எதிர்ப்பு
சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனை கோவிட் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியான நாகேந்திரனுக்கு கடந்த நவம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009 ல் சிங்கப்பூருக்கு ஹெரோயின் போதை மருந்து கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து, நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி நாகேந்திரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவித்திருந்த நிலையில், நாகேந்திரன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டமையினால் அவரது மரண தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மரண தண்டனையை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் ஜனவரி 24 ஆம் திகதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ், பெலிண்டா ஆங் மற்றும் சாவ் ஹிக் டின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செ்யதி வெளியிட்டுள்ளன.