இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை அறிவித்த தமிழ் முஸ்லிம் கட்சிகள் (Video)
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு “சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி”யே தீர்வாக முடியும். ”அதனை என்றோ ஒருநாள் அடைந்தே தீருவோம்”
இந்தநிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் வரை அதிகாரப் பரவலாக்கங்களை உள்ளடக்கிய 13 வது திருத்தம் பாதுகாக்கப்படவேண்டும் என்று தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் இன்று சந்திப்பை நடத்திய தமிழ் முஸ்லிம் கட்சிகள் வடக்குகிழக்கு, முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வெளியிட்டனர்.
இலங்கை அரசாங்கம், இன்று மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைத்து மாகாணங்களின் அதிகாரங்களை கபளீகரம் செய்வதாக இந்த பிரதிநிதிகள் குற்றம் சுமத்தினர்.
எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவின் உதவியைக் கோரி, கூட்டு ஆவணம் ஒன்றை இந்தியாவிடம் கையளிக்கவுள்ளதாகவும் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனின் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்டவர்கள் பங்கேற்றனர்.





