யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video)
எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற துயர் சம்பவங்களை நினைவுகூரும் பொருட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பயணம் யாழில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று பல்வேறு பிரதேசங்களை ஊர்தி சென்றடைந்தது.
கிளிநொச்சி
முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இதனையடுத்து இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை வந்தடைந்துள்ளது.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதிவழியாக வந்து புதுக்குடியிருப்பு நகரை அடைந்துள்ளது.
அங்கிருந்து 2009 இல் இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நீதிகோரிய ஊர்தி புதுக்குடியிருப்பு நகரை அடைந்ததும் இராணுவம் ,புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.
இராணுவ அதிகாரி ஒருவரது வாகனம்
பின்தொடர்ந்து சென்றதோடு முச்சக்கர வண்டி ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலும்
பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தும்
தொடர்சியாக பின்தொடர்ந்தும் சென்றுள்ளது.
முல்லைத்தீவு
யாழில் இருந்து ஆரம்பமான தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்துள்ளது.
மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மாட்டங்கள் ஊடாக இன்று முல்லைத்தீவு பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவுமாவட்டத்தினை சென்றடைந்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழின படுகொலைக்கு நீதிகோரிய ஊர்திபவனியின் போது வீதிகளில் மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவிவருகின்றார்கள் முல்லைத்தீவு மட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு முள்ளியவளை, வற்றாப்பளை, சிலாவத்தை அளம்பில், நாயாறு, கொக்குத்தொடுவாய் வரை ஊர்தி பவனியாக சென்று நாளை முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடையவுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த உறவுகள் நினைவுகூரப்பட்டதுடன் நாளைய தினம் அஞ்சலி செலுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 51-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இன்றைய அமர்வில் எமது நாட்டில் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் இன விடுதலைக்காக போராடிய போராளிகளுக்கும் இனஅழிப்பு செய்யப்பட்ட உறவுகளுக்கும் நீதிவேண்டி பலபகுதிகளிலுமிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி நடை பவணி பேரணியானது நடைபெற்றுவரும் நிலையில் இனஅழிப்பில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி வவுனியாவிற்கும் சென்றுள்ளது.
இதன்போது ஊர்தியில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வவுனியா, பண்டாரவன்னியன் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டிருந்தது.