கிளிநொச்சியில் பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டு மேதின பேரணி (Photos)
கிளிநொச்சியில் தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கக் கோரியும் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய கூட்டு மே தின பேரணி இடம்பெற்றுள்ளது.
சர்வதேச மே நாளாகிய இன்று கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய கூட்டு மே தின பேரணி இன்று பி.ப. 2.00 மணிக்குக் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகியது.
இதன்போது தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கக் கோரியும், வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் நீண்டகாலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக நாட்டு மக்களை வாட்டும் அதிகரித்த விலைவாசிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணி நகர்ந்து சென்றதுடன், தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்களையும் அடக்கு முறைகளையும் சித்தரிக்கும் வகையிலான ஊர்திகளும் பவனியாகச் சென்றடைந்தன.
மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய வாகனங்களும் குறித்த பேரணியில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ச.சமல் ராஜபக்ச மற்றும் விவசாய
அமைச்சர் ஆகியோர் விவசாயிகளின் பிரேத பெட்டியைச் சுமந்து வருகின்ற
காட்சிகளையும் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











