மீண்டும் விடுதலைப் புலிகளை கையில் எடுப்பதன் சூட்சுமம் என்ன?
மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை உச்சரித்து அதன் மூலமாக மற்றுமொரு நரித்தன அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் மீண்டும் தலை தூக்குவதாகவும் இது தொடர்பில் தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பக்கத்தில்,
“விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய புலனாய்வு நிறுவனம். சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், நேற்று முதல் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.
சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எச்சரிக்கை!” என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் பின்புலம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈழ ஆதரவு செயல்பாடுகளை மேற்கொள்ளும் தமிழ் உணர்வாளர்களினதும், தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களின் குரல் வளையத்தை நசுக்கும் திட்டம் என்று அரசியல் பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதுமாத்திரமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவில் நீடிப்பதற்கான ஆதாரமாகவும் அதன் அதன் நகர்வாகவும் இந்த எச்சரிக்கை அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கு தொப்புள் கொடி உறவை சிதைப்பதம், ஈழ ஆதரவு அலைகளை ஒடுக்குவதற்குமான முயற்சிகளை புலி எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அதன் இன்னொரு வடிவமே இது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஈழத் தமிழர் நலன் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் செயல்பாடாகவும் இந்த எச்சரிக்கை பார்க்க முடியும் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இது தொடர்பில் விழிப்பாக செயல்படுமாறு தமிழ் உணர்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.