சீனர்களுக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழகம்
இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின(பிஎல்ஏ) பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழக மாநிலம் தீவிர பாதுகாப்பு கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அண்டை நாட்டில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாநில புலனாய்வு அமைப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாநில புலனாய்வுத்துறை எச்சரிக்கை

சீன மக்கள் விடுதலை இராணுவ பணியாளர்களின் நடமாட்டம் மற்றும் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகளை வட இலங்கையில் பயன்படுத்துவதால், தமிழக கடலோர மாவட்டங்களில் நிலையான கண்காணிப்பு தேவை.
கடல் அட்டை விவசாயத்தை தொடங்கும் போர்வையில் சீன மக்கள் விடுதலை படையினர் அதிநவீன கருவிகளை பயன்படுத்துவதாக தமிழக மாநில புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு சில சீன பிரஜைகள் இலங்கையை தளமாகக் கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பணியாளர்களின் உதவியுடன் கடல்வழியாக இந்தியாவுக்குள் ரகசியமாக நுழைந்ததாக அதே நிறுவனம் எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ரொக்கெட்டுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணைகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் சீனக் கப்பல் தொடர்பில் மத்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு கடற்கரையோரத்தில் அணுமின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற முக்கிய நிறுவல்கள் தொடர்பில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு, பருத்தித்துறை, அனலைத்தீவு, மீசாலை, சாவக்கச்சேரி உட்பட வட இலங்கையின் பல பகுதிகளில் சீனப் பிரஜைகள் சுதந்திரமாக நடமாடுவது தமிழக கடற்தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சீனர்கள் தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான கடல் வளத்தை சுரண்டுகிறார்கள் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் தமிழர்களின் அச்சம்

தற்போது நிலவும் சூழ்நிலையானது இலங்கைப் பிரஜைகளுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி தீவு தேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீதான இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளூர் தமிழர்களின் அச்சமாக உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 வருகை குறித்து மத்திய அரசின் ஆலோசனைக்கு பிறகு தென்கிழக்கு கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு பலப்படுத்தியது.
1,076-கிமீ நீளமுள்ள கடலோரப் பகுதியில் உள்ள முக்கிய நிறுவல்களில் தமிழக அரசாங்கம் அதன் உளவுத்துறை இயந்திரங்களை செயல்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு

இந்தநிலையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் தலைவருமான சந்தீப் மிட்டல், இலங்கையில் சீன பிரஜைகளின் பிரசன்னம் அதிகரித்து வருவது மறுக்கத்தக்க விடயம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி வருகை தருவதும், கடல் வெள்ளரி அறுவடைக்கான வாய்ப்புகளை மதிப்பிடும் போர்வையில் அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்வதும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
இந்தியாவில் இளங்கலை படிப்பை தொடரும் இலங்கை மாணவர்களுக்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்கும். அதே வேளையில், சீனா தனது சொந்த நாட்டில் படிக்கும் முதுகலைப் பட்டதாரி இலங்கை மாணவர்களுக்கு நிதியுதவி செய்கிறது.
சீனர்கள் இலங்கையில் உள்ள இளைஞர்களை தங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க தூண்டுவது என்பது வெளிப்படையானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிராந்திய கடல்சார் கடலோர பாதுகாப்பு பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு ,தமிழ்நாடு அரசு ஏற்கனவே ராமேஸ்வரம் அருகே 240 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தாலும் இந்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.