கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான சாட்சியங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவு பதிவு செய்ய வேண்டும்.
கைது
அரசோடு ஒட்டு குழுக்களாக செயற்பட்ட நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட கருணா குழுவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளராகவும் மாகாண சபை உறுப்பினராக இருந்த இனிய பாரதியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களுடைய கைதை தொடர்ந்து பல கைதுகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் கடந்த காலங்களில் பல வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்களாக நேரடியான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.அந்த அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
அத்துடன் அவர்களுடைய தலைமை ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர் கருணா அம்மான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாக குற்றச்சாற்றப்படவில்லை என்ற போதிலும் அவ்வாறு இருந்திருந்தால் அல்லது அக்காலத்தில் குறித்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டவர்களையும் விசாரணை வளையத்துக்குள் எடுத்து விசாரணைகளை ஆரம்பிப்பதன் மூலம் பல்வேறு விடயங்கள் வெளியாகும்.
எனவே அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



