தாளையடி சுற்றுலா கடற்கரைக்கு வரும் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடற்கரைக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு தொடர்பாக, பிரதேச ஊடகவியலாளர் ஒருவர், சமாச தலைவருடைய அலுவலகத்திற்கு சென்று கேள்வியெழுப்பிய வேளையில், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
அவர் மேலும் கூறுகையில்,
மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன.

பொலிஸார் மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து, கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும்.
அத்துடன், தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கான வேலைப்பாடுகளை நாங்கள் ஆலோசனை செய்து வருகின்றோம்.
இதற்காக, இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.