மட்டக்களப்பில் மர்மநபர்களால் வாள்வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு- ஆரையம்பதி பகுதியில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (20) ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதல்
இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதன் போது அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி துரத்தி வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
கைது நடவடிக்கை
இதனையடுத்து அங்கு தாக்குதலை நடாத்திய வாள்வெட்டு குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய வாள்வெட்டுக் குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கோடு இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்.ஆவாக்குழுவின் பாணியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அச்சமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |